“கிறிஸ் ராக்கிடம் எப்போது வேண்டுமானாலும் பேச தயாராக இருக்கிறேன்” மனம் திறந்த வில் ஸ்மித்

Prasu
2 years ago
“கிறிஸ் ராக்கிடம் எப்போது வேண்டுமானாலும் பேச தயாராக இருக்கிறேன்” மனம் திறந்த வில் ஸ்மித்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மார்ச் மாதம் நடப்பாண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்தது. 

கிங் ரிச்சர்ட் திரைப்படத்தில் நடித்ததற்கான இந்த விருதை அவர் பெற்றுள்ளார். விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடாபிங்கெட் பற்றி தொகுப்பாளரும் காமெடி நடிகருமான கிறிஸ்ராக் நகைச்சுவையாக பேசியுள்ளார். 

அப்போது ஜடா தலை முடியை கிறிஸ் ராக் கிண்டல் செய்துள்ளார். அதனால் கோபமடைந்த வில் ஸ்மித் மேடைக்குச் சென்று கிறிஸ் கன்னத்தில் அடித்துள்ளார். 

சக நடிகரை வில் ஸ்மித் தாக்கிய சம்பவம் உலக அளவில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.

வில் ஸ்மித்தின் மனைவி ஜடா அலோபீசியா எனும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அது பற்றி கிறிஸ் ராக் கிண்டல் செய்து தவறு எனவும் வில் ஸ்மித் செய்தது சரி எனவும் சிலர் வாதிட்டுள்ளனர். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து வில் ஸ்மித் ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு வில் ஸ்மித்ருக்கு 10 ஆண்டுகள் தடை விதித்த அகாடமி அமைப்பு உத்தரவிட்டிருக்கிறது. 

இருந்தபோதிலும் இந்த விவகாரம் தொடர்பாக வில் ஸ்மித் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது செயலுக்காக கிறிஸ்ராக்கிடம் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பு வருகின்றனர்.

ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக வில் ஸ்மித் தனது youtube பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

அந்த வீடியோவில் கிறிஸ் ராக்கை  தான் தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்ததாகவும் ஆனால் இது பற்றி தற்போது பேச தயாராக இல்லை என கிறிஸ் ராக் தரப்பில் பதில் அளித்ததாகவும் வில் ஸ்மித் தெரிவித்துள்ளார். 

மேலும் தனது செயல் எந்த வகையிலும் ஏற்கத்தக்கது  அல்ல எனவும் கூறியுள்ளார் வில் ஸ்மித். இதற்காக கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவரிடம் எப்போது வேண்டுமானாலும் பேச தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.